ஏன் நகரத்து பிள்ளைகளை விட கிராமத்து பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்?
பொதுவாகவே கிராமத்தில் வாழும் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனம் அதிகம். போதிய அளவு அவர்களுக்கு படிப்பு தரம் கிடைக்காததால் மட்டுமே அவர்களுக்கு நகர்புற பாணவர்களை விட பின்தங்க வேண்டிய நிலை.
நகர்ப்புறத்திலுள்ள மாணவர்களின் நினைவுத் திறன், புத்திசாலிதனம் ஏன் கிராமத்து மாணவர்களை விட குறைவாக உள்ளது தெரியுமா? மாசுபட்ட காற்றினால். ஆமாம் அசுத்தமான காற்றினால் குழந்தைகளின் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது என ஆராய்ச்சி கூறுகிறது.
இதன் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில், நகர்புறத்து பிள்ளைகளின் மூளை திறன் 4-5 சதவீதம் கிராமத்து பிள்ளைகளை விட குறைவாக இருக்கிறது. காரணம் மாசுபட்ட சுற்றுச் சூழல் என்கிறது ஆய்வு.
காற்றின் எதிர்மறை விளைவுகளால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் சுவாசிப்பு பெரியவர்களைவிட இருமடங்கு வேகமாக இருக்கும்.
இதனால் இதயதுடிப்பும் பெரியவர்களை விட அதிகமாக இருக்கும். எனவேதான் காற்று அதிக விளைவை ஏற்படுத்துகிறது. மேலும் மூளையின் செயல்பாடுகள் அந்த வயதுகளில்தான் ஆரம்பிக்கும். நுரையீரல் அனுப்பும் ஆக்ஸிஜன் மூளையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். எனவே சுத்தமான காற்றும் அந்த பருவத்தில் இன்றியமையாதது.
சரி வெளியில்தானே மாசு. வீட்டிலேயே வைத்திருக்கலாம் எங்கிறீர்களா? உங்கள் வீடு சுத்தமானது என நினைத்தால் அதுவும் தவறானது. காரணம் வீட்டிலேயே அதிக அளவு மாசு சுழல்கிறது. சமையல் புகை, பொம்மைகள், பெயின்ட் ஆகியவைகளும் மாசுவை வீட்டில் உண்டாக்குபவை. இவையெல்லாம் சுவாச பாதிப்பினை உண்டாக்கும்போது, அது மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது.
கோடிக்கணக்கான குழந்தைகள் வீடு மற்றும் வெளிப்புற மாசினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த இரு விதமான மாசு பட்ட காற்றும், பாலி சைக்ளிக் அரோமேடிக் ஹைட்ரோ கார்பனை உண்டாக்குகின்றன. இவை மிகவும் மோசமான ஃப்ரீ ரேட்கல்ஸ். மூளையின் செல்களை அழிக்க வல்லது. இதனால் அவர்களின் மூளையின் செயல்திறன் மிகவும் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.
கிராமத்து சூழ் நிலையில் பிள்ளைகள் சுத்தமான ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்கிறார்கள். இதனால் அவர்களின் மூளையின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். அதனால்தான் அவர்களின் உட்கிரகிக்கும் திறன் நகர்புற பிள்ளைகளை விட அதிகம் காணப்படுகிறது.
இதனால் சுத்தமான காற்றை இந்தியாவில் பெற போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வல்லபாய் படேல் மருத்துவமனையின் நோய் எதிர்ப்பு துறையின் தலைவர் கூறுகிறார். இந்த ஆய்வு பற்றிய கட்டுரை பீடியாட்ரிக் ஜர்னல் என்னும் இதழில் வெளிவந்துள்ளது.




